Tuesday, January 27, 2009

”நாடு அதை நாடு”

படம் = நாடோடி
பாடல் = கண்ணதாசன்

நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு?

பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண் பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு”

பாலைவனம் என்ற போதும் நம் நாடு
பாறை மலை கூட நம் எல்லைக் கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்

வானம் குலமாந்தர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வீரர் விழிதாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை

பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்
நிலத்தினில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்



“நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு?”

தனி நபர் லாபத்திற்காகச் சட்டங்கள் புறக்கணிக்கப்படுவதும், அமைப்பின் வளத்திற்காகத் தர்மங்கள் நசுக்கப்படுவதும், மாநிலங்களின் நலத்திற்காகத் தேசிய ஒருமைப்பாடு கேலிக்குள்ளாக்கப்படுவதும் அதிகரித்து வரும் இந்த அவசர உலகத்தின் அனைத்துப் பிரச்சனைகளின் ஆணிவேர் எது என்பதையும் அதிலிருந்து சமுதாயம் விடுதலை பெறுவதற்கான வழி என்ன என்பதையும் மேலுள்ள வரிகளின் மூலம் கவிஞர் தெளிவாக்குகிறார்.

நமக்கிடையேயானப் போட்டிகள் நேர்மையானதாக இல்லாதபட்சத்தில், தனித்தனியான சிறிய வட்டங்களின் வளர்ச்சி, ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கும்போது அதனதன் பெரிய வட்டங்களின் ஆக்கத்துற்கு ஆதரவாக இருப்பதைவிட, அழிவிற்கே சாதகமாய் அமையும். அதேசமயம் பெரிய வட்டங்களின் வளர்ச்சிக்காகச் சிறிய வட்டங்கள் விட்டுக் கொடுக்கும்போது, அங்கு ஆரோக்யமானப் போட்டியும் நிலவும்; ஒட்டுமொத்த வளர்ச்சியும் காணப்படும்.

“பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண் பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு”

இந்த உண்மையை உணர்ந்து உன் ஒவ்வொரு அசைவுகளிலும், சமுதாயத்திற்காக, நாட்டிற்காகப் பாடுபடு. மானமே (நாட்டின்) நமது லட்சியம் என்ற உயர்ந்த கொள்கையினை என்றும் பாடிக்கொண்டிரு, உன் சிந்தனையாலும் செயலாலும் (வாழும் பண் பாடு). எல்லாவற்றையும் விட உயர்ந்தது மானமே என்பது நம் பண்பாடு அல்லவா (வாழும் பண்பாடு).

“பாலைவனம் என்ற போதும் நம் நாடு
பாறை மலை கூட நம் எல்லைக் கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்”

வெறும் பாலைவனமாகவே இருந்தாலும், இது நமது நாடு; நம் முன்னோர்கள் பிறந்து, வளர்ந்து, மரித்து, இந்த மண்ணோடும், நீரோடும், காற்றோடும் கலந்து என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் புண்ணிய பூமி. பாறைகளும், மலைகளும் மட்டுமே நிரம்பி இருந்தாலும் கவலையில்லை; அவைகள் எங்களின் எல்லைகளாக, அரண்களாக எங்களைக் காத்து நிற்கும். இப்படி இருக்கும்போது எங்கள் நாட்டிலோ, ஜீவ நதிகள் கரை ஏறிப் பாய்ந்து, கழனி செய்து, காணும் இடமெல்லாம் கனித்தோட்டங்களாய் செழித்து நிற்கின்றன. இந்த அபரிமிதமான வளத்தின் காரணமாக, அறிவும் வலிமையும் ஒருங்கே பெற்று எங்கள் மக்கள் அனைவருமே வீரர்களாக மாறிவிட்டனர்.

“வானம் குலமாந்தர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வீரர் விழிதாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை”

எல்லாம் இருக்கும் எங்கள் நாட்டில் இல்லாதது மூன்று உள்ளது; அவைகள்
1. அன்பு, அழகு, அறிவு ஒருங்கே அமையப்பெற்றும், அகம்பாவம் அற்று, ‘பெருக்கத்து வேண்டும் பணிவு’ எனும் இலக்கணப்படி எம் மங்கைகள் அடக்கத்துடன் வாழ்வதனால், வானம் எம்மங்கையரின் முகங்களை இதுவரைப் பார்த்ததில்லை.
2. பகிர்ந்துண்ணுதலும், சகிப்புத் தன்மையும் உள்ளடக்கிய கூட்டுக் குடும்பம் எங்கள் வாழ்க்கை நெறியாக அமைந்துள்ளதால், தீய எண்ணங்கள் எங்கள் மக்களின் மனங்களைத் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை.
3. தர்மத்திற்காக மட்டுமே நாங்கள் போரிடுவதால், எங்கள் வீரர்கள் எந்தப் போர்க்களத்திலும் தோல்வியுற்று, தலை கவிழ்ந்து நிலத்தைப் பார்த்ததில்லை.
இவ்வாறு, பண்பாடு, ஒழுக்கம், வீரம் மூன்றும் எங்கள் இரத்தத்தொடு கலந்துவிட்டமையால், எங்கள் நாடே வெற்றித் திருமாது நடைபோடும் எல்லையாக அமைந்துவிட்டது.

“பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்
நிலத்தினில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்”

பசித்து அடைக்கலம் தேடி வருபவர்களின் பசி ஆற்றுதல் சாதாரண விருந்தோம்பல். நாங்களோ எங்களையே அவர்களுக்கு விருந்தாக ஆக்கிக் கொள்வோம். எங்களை அழித்துக் கொண்டால்தான் அவர்களைக் காக்க முடியும் என்ற நிலை வந்தால், எங்களையே பலி கொடுக்கவும் நாங்கள் தயங்குவதில்லை. ஆனால் எங்களை எதிரி என எண்ணிச் சீண்டிப்பார்க்க யாரும் வந்தால், அன்று நாங்கள் புலியாக மாறுவோம். எங்கள் பலம் அறியாமல் போருக்கு வந்த அவர்கள் அறியாமைக்கு மனம் வருந்தி, இரக்கம் கொண்டு, எங்களின் ஆற்றலை வெறும் சீற்றமாகக் காட்டி விரட்டுவோம். அப்படியும் புரியாமல் போருக்கு நின்றால், இந்த மண்ணை எங்கள் உயிராக எண்ணிப் போரிட்டு எங்கள் உரிமையை நிலை நாட்டிக் கொண்டாடுவோம். முடிவில் எதிரிகளை அழித்து, அவர்கள் உடல்களை எங்கள் கழனிகளுக்கு எருவாக இடுவோம்.

------------------------------------------

கவியரசரின் இக்கனவு மெய்ப்பட வேண்டும்; வரம் கைவசமாவது விரைவினில் வேண்டும்.

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ

படம்: நிழல் நிஜமாகிறது
பாடல்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன்

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்

கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான ராகம் ஏனிந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லி தந்தார் மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ (இலக்கணம்)

என் வாழ்க்கை நதியில்
கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சிலே ஏதோ
கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ
விளக்கி வைப்பாயோ

தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டு பாட தாரமில்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி பிறக்கும் உனக்கொரு பாதை
உரைப்பது கீதை

மணியோசை என்ன இடி ஓசை என்ன
எது வந்த போதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனை காத்த கண்ணே
நீ எது நான் எது ஏன் இந்த சொந்தம்
பூர்வ ஜன்ம பந்தம் (இலக்கணம்)

============================================

நாயகன், நாயகி இருவருமே மிகுந்த ego உள்ளவர்கள். உள்ளுக்குள் நேசம் இருந்தும், வெளியே சொல்ல மறுத்து, சந்திக்கும் போதெல்லாம் மோதிக் கொள்வார்கள். படிப்படியாக அந்த இடைவெளி குறைந்து வரும் வேளையில் அவன் மேல் ஒரு பழி விழுகிறது. இந்தச் சூழ்நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் கவியரசர்.

பாடலும், எனது பார்வையும் பின் வருமாறு;

பொது:
“இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்”
இயல்பிலிருந்து இவர்கள் மாறிவிட்டார்களோ; இவர்களுக்கு இடையே ஒரு காவியம் தொடங்கிவிட்டதோ! இதுவரை மறைத்து நடித்தது எதற்காக; யாருக்கு எதைப் புரிய வைக்க?)

அவன்:
“கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான வாழ்வில் ஏனிந்த மாற்றம்”
முல்லை என்பதே மணம்தான்; மனம் என்பதே அன்புதான். அது கல்லால் ஆக்கப்பட்டதோ என்று அவன் எண்ணியிருந்த வேளையில் அவளிடமிருந்து அன்புமணம் கண்ட அவனுக்கு இன்ப அதிர்ச்சி.
காற்றுப்போல தளைகளின்றி சுழன்றிருந்தாயே இன்று எதற்காக இந்த மாற்றம் என்று திகைக்கிறான்.
(அவளிடமிருந்து வெளிப்பட்ட மெல்லிய காதலை மலரின் மணத்துடன் ஒப்பிடுகிறார், கவிஞர். அவள் இன்னும் முழுமையாக தன் காதலைக் கூறவில்லை அல்லவா. வெறும் மணம் மட்டுமே அவனைச் சென்று அடைந்துள்ளதாகக் கூறியிருப்பது அழகு)

“வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ.”
பருவ சிந்தனையற்ற பிள்ளை மனம் வெண்மேகம்; ப.சி. வந்த மனம் கார்மேகம். (கார்மேகம்தானே ‘பலன்’ கொடுக்கும்-கவிஞரின் தமிழ் வாழ்க!) 'பருவம்' வந்தால் எல்லா ‘வெண்மேகமும்’ ‘கார்மேகம்’ ஆகிவிடும். இங்கு மன்மதன் கண் திறக்க, கார்மேகமானது அவள் பெண்மை.

அவள்:
“என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏதோ கறை ஒன்று கண்டேன்”
எந்த இலக்குமின்றி ஓடிக்கொண்டிருந்த அவள், அவன் வரவால் தன் வாழ்விற்கு ஒரு பொருளை (கரை) கண்டாள். அதே நேரம் அவன் மேல் விழுந்த பழியால் அவன் நெஞ்சில் ஒரு இருளை (கறை) யும் கண்டாள்.
“புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை”
அவனை நம்புவதா? பழியை நம்புவதா என்ற குழப்பத்தின் விடை தெரியாது, லேசாகத் திறந்த தனது மனதைத் தானே திரையிட்டு மூடிக் கொண்டாள். ஆனாலும் முழுவதுமாக அவன் நினைவுகள் தரும் இன்ப வெள்ளத்திற்கு அணை போட அவளால் முடியவில்லை.
”மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ
விளக்கி வைப்பாயோ.”
இடையே விழுந்துள்ள திரையை அவனே வந்து விலக்கவேண்டும், தன் மேல் விழுந்த பழியை வீண்பழி என்று அனைவரும் உணர விளக்குவதன் மூலம் என்றும் வேண்டுகிறாள்.


அதே படத்தில் இன்னொரு ஜோடி இருவரும் நாயகி வீட்டில் வேலை பார்ப்பவர்கள். தன்னை அவமானப் படுத்தி வெறுக்கும் அவளைக் காக்க பழியை ஏற்று அவளைக் காப்பாற்றி வருகிறான் அவன். அவனது தூய அன்பை உணர்ந்து அவனைப் பற்றி அவள் பாடுவதாக வரும் வரிகள் இவை.

“தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுப் பாட ஆதாரமில்லை”
வாழ்வில் எந்தப் பிடிப்பும் இன்றி தடுமாறிக்கொண்டிருக்கும் வெள்ளை மனம் கொண்ட பிள்ளை அவன். இருந்தும் அவளைக் காப்பாற்றி, அவளது குழந்தையைத் தாலாட்டிக் கொண்டிருக்கிறான் அதற்கான எந்த உரிமையும் இன்றி.
”தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்”
அவனே இன்னும் குழந்தை. அவனுக்கே தேவை ஒரு தாலாட்டு. எந்த மனிதனுக்கும் அதற்குத் தகுதி இல்லை. தெய்வமே வந்து பாடினால்தான் உண்டு. அப்படி இங்கு வந்து பாட முடியாமல் போனால் அதை எப்படித் தெய்வம் என்று அழைக்கமுடியும்?

“மறுபடி பிறக்கும் உனக்கொரு பாதை
உரைப்பது கீதை.”
அவனது அன்பும், தியாகமும் வீண்போகாது. அவன் வாழ்வு மலரும்; புதிய பாதை திறக்கும். இது இறைவன் வாக்கு.

”மணியோசை என்ன இடி ஓசை என்ன
எது வந்த போதும் நீ கேட்டதில்லை”
அவன் காது கேளாதவன். அவனுக்கு சிறிய ஓசையும் (மணி) ஒன்றுதான்; பெரிய ஓசையும் (இடி) ஒன்றுதான். இரண்டிற்கும் அவன் சலனப்படுவதில்லை. அதுபோல் அவனது பிள்ளை மனம், வரும் சோதனையின் அளவைக் கண்டு நடுங்குவதில்லை. அவனுக்கு சிறிய சோதனையும் ஒன்றுதான்; பெரிய சோதனையும் ஒன்றுதான். அதனால்தான் திருமணமின்றித் தாயான பெண்ணைத் தன்னுடன் வைத்துக் காத்து வருகின்றான்.

”நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனைக் காத்த கண்ணே
நீ எது நான் எது ஏன் இந்த சொந்தம்
பூர்வ ஜென்ம பந்தம்.”
நிழல் எப்படிப் பிரிவதில்லையோ அதுபோல் தொடர்ந்து நின்று காக்கும் தெய்வம் நீ. மற்றவர்களைப் போல் அல்லாமல் நிஜமாக வந்து என்னைக் காத்த கண் போன்றவனே. நமக்கிடையே வந்துள்ள இந்தச் சொந்தம், பூர்வ ஜென்ம பந்தம் என்று அவள் முடிக்கிறாள்.

Monday, December 25, 2006

அன்புள்ள அத்தான் வணக்கம்

அன்புள்ள அத்தான் வணக்கம்-உங்கள்
ஆயுளைக்கொண்டாள் மயக்கம்.

தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்.

மாலைப் பொழுது வந்து பகைபோலக் கொல்லும்
வருவார், வருவார் என்ற சேதியும் சொல்லும்
ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும்
அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்.

(இப்படி எழுதியும் நான் வரவில்லையென்றால்?)

பொன்மணி மேகலை பூமியில் வீழும்
புலம்பும் சிலம்பிரண்டும் எனை விட்டு ஓடும்
கைவளை சோர்ந்துவிழும் கண்களும் மூடும்
காண்பவர் உங்களைத்தான் பழிசொல்ல நேரும்

அன்புள்ள அத்தான் வணக்கம்-திருமணம்
ஆகுமுன் வேண்டாம் குழப்பம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம்

முதல் வரி தலைவனுக்குக் கூறும் முகமன் (அன்புள்ள அத்தான் வணக்கம்).
இரண்டாவது வரியில், தன்னைப் பற்றி எழுதவேண்டிய இடத்தில் உங்கள் காதலி/மனைவி என்று எழுதாமல் உங்கள் ஆயுளைக் கொண்டாள் என்று எழுதுகிறாள். இதனால் அவள் சொல்ல விழைவது எனக்கென்று எந்த அடையாளமும் இல்லை. உன் ஆயுள் எதுவோ அதுதான் நான். அதன் பின் நான் இல்லை. ஒன்று எனக்கு மரணம்; அல்லது நான் நடைபிணம். இப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் தனக்கு ஒரு மயக்கம்(குழப்பம்) என்று மடலைத் தொடங்குகிறாள் (உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம்)

தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்.

இந்தியாவினை எத்தனையோ பேரரசர்கள் ஆண்டார்கள். ஆனால் எந்த வடநாட்டுப் பேரரசர்களும் வெல்ல முடியாத ஒரு நிலப்பகுதி இங்கே இருந்தது என்றால் அது சேர, சோழ, பாண்டியர்களின் எல்லைக்குட்பட்ட தென்னாடுதான். காரணம் அவர்களின் கையிலே இருந்த ஒளி வீசும் திருவாள். அதற்கு இணையானது உனது கண்கள் என்று சொன்னீர்கள். இவ்வளவு ஒளி வீசும் கண்கள் இருந்தும் என்ன பயன்? ‘சாதாரண' கண்களைப் பெற்றுள்ள மற்றப் பெண்களுக்குக் கிடைக்கும் சுகமான உறக்கத்தை இந்த திருவாள் கண்கள் எனக்குக் கொடுக்கவில்லையே. (தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும் கண்ணிருந்தும் இல்லை உறக்கம்)

மாலைப் பொழுது வந்து பகைபோலக் கொல்லும்
வருவார் வருவார் என்ற சேதியும் சொல்லும்
ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும்
அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்

பகலை எப்படியோ சமாளித்துவிடுகிறேன் (நண்பர்கள், உறவினர்களுக்கு நன்றி). இந்த மாலைதான் ஒரு பகைவனைக் கொல்வதைப்போல என்னை இரக்கமின்றிக் கொல்லுகின்றது. ஆம். அதுதான் நாம் பிரிந்திருக்கிறோம் என்பதையும்; வரும் இரவை நான் தனிமையில் கழிக்கவேண்டியுள்ள கொடுமையையும் நினைவூட்டி என்னைக் கொல்லாமல் கொல்கிறது (மாலைப் பொழுது வந்து பகைபோலக் கொல்லும்).

இரவு்-பகல், இன்பம்-துன்பம்; இயற்கையில் எல்லாம் இரட்டைகள் அல்லவா! அதன்படி துன்பத்தைக் கொடுத்த மாலையே ஒரு இன்பத்தையும் கொடுக்கிறது, தென்றல் எனும் வடிவத்தில். அது உடலுக்கு மட்டும் சுகம் தரவில்லை; மனதிற்கும் தருகிறது ஒரு சேதியாக (”தென்றல் வரும் சேதி வரும்"). நீ வந்துகொண்டிருக்கிறாய் என்ற இனிய செய்தியை அந்தத் தென்றலே சுமந்து வந்து கொடுக்கிறது (வருவார் வருவார் என்ற சேதியும் சொல்லும்).

பிரிவினால் மனம் சோர்ந்து, பசியின்மையினால், உண்ணாமலிருந்து, அதனால் உடல் சோர்ந்து ஆலிலை மென்மையினை அடைந்துவிட்ட எனது உடல், நீ வரப்போகிறாய் என்ற உண்மையில் துள்ளிக் குதிக்கும் (ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும்).

பிரிவின் ஏக்கத்தாலும், பருவத்தின் தாக்கத்தாலும் நம் சந்திப்பின் தொடர் நிகழ்வுகளை என் மனம் கற்பனை செய்துகொண்டே போகும்; ஆனால் தமிழ்ப் பெண்ணின் இயற்கை நாணமோ என்னைத் தடுத்துக்கொண்டே வரும். மாலை முழுதும் நடக்கும் இந்த மனப்போர் அந்தியில் ஒரு முடிவிற்கு வரும், ஆசை நாணத்தை வெல்வதாக (அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்).

இந்தக் காவியப் பாடலைக் காட்சியாகக் காண....
http://www.youtube.com/watch?v=TIVPKqfqDXo&feature=related